சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் எச்சரித்து உள்ளனர்.
தமிழகத்தில் கொவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக ஒரு கட்டுக்குள் வராத நிலையில், டெங்கி பாதிப்பும் சேர்ந்துகொண்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இருப்பினும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்தப் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் ஒரு கட்டுக்குள் இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கி பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும் 'புதிய தலைமுறை' ஊடகச் செய்தி கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,410 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை 2,657 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது மாநிலத்தில் தினமும் 25 முதல் 30 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், தற்போதே இக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
காய்ச்சல், தலையின் பின்பகுதியில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
டெங்கிக் கொசுக்கள் தண்ணீரில் அதிகம் பெருகும் என்பதால் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் 22,500 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் களத்தில் இருப்பதாகவும் டெங்கி பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தக் காய்ச்சல் அதிகரிப்பைத் தடுக்க முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்த வும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

