திண்டிவனம்: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சிகள் அைனத்தும் ஆயத்தமாகி வரும் நிலையில், பாமகவின் மாநில நிர்வாகிகள் பலரும் கொத்து கொத்தாக அதிமுகவில் இணைந்து வருவது அக்கட்சியின் மூத்த தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து களம் கண்ட பாமக, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பால் அதிமுக அதிர்ந்து போனதுடன், திமுகவின் வியூகம் வேலை செய்வதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில்தான் பாமகவின் மாநில நிர்வாகிகள் பலரும் திண்டி வனத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் சி.வி.சண்முகத்திடம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதான அதிருப்தியைக் கொட்டித் தீர்த்துள்ளனராம். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டி என டாக்டர் ராமதாஸ் அறிவித்ததை பாமக நிர்வாகிகளில் 90% பேர் ஏற்கவில்லை எனவும் சி.வி.சண்முகத்திடம் சுட்டிக்காட்டி உள்ளனர்.

