திருவள்ளூர்: கலப்புத் திருமணம் செய்துகொண்ட தனது கணவரை அவரது குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்துவிட்டதாக தனது கைக்குழந்தையுடன் சென்று ஒரு இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன், தனக்குத் தெரியாமலேயே கணவரின் உடலை எரியூட்டி விட்டதாகவும் இந்தக் கொடூர சம்பவத்தில் தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் அப்பெண் குரல் எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், அயநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அமுல் என்பவர் ஆரணியைச் சேர்ந்த கௌதம் என்பவரை கடந்த 2019ல் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், ஆவூரில் அமுலும் கௌதமும் குடி பெயர்ந்துள்ளனர். கடந்த மாதம் அமுலுக்கு பெண் குழந்தை பிறந்தநிலையில், கடந்த 17ஆம் தேதி கௌதமின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, ஆரணியை அடுத்த காரணி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு கௌதம் சென்றுள்ளார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவரின் கைபேசி எண்ணும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
இதனால் சந்தேகம் ஏற்பட்ட அமுலின் உறவினர்கள், கௌதமின் ஊருக்குச் சென்று பார்த்தபோது, அங்கே அவர் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். இது குறித்து அமுலுக்குத் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தனது கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது மரணம் குறித்து தன்னிடம் மறைத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆரணி காவல் நிலையத்தில் அமுல் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.