சென்னை: நகைக்கடன் பெறுவதற்காக கூட்டுறவு வங்கிகளில் நடந்துள்ள முறைகேடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள அனைத்து விதமான பொது நகைக் கடன்களையும் இந்தக் குழு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தக் கடன் வழங்கப்பட்டதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஐந்து பவுனுக்கு மட்டும் அல்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது.
"கூட்டுறவு சார் பதிவாளர், கூட்டுறவு வங்கியின் மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது," என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவானது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட நகைக்கடன்களை ஆய்வு செய்யும் என்றும் இந்தப் பணி விரைவில் துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.