சென்னை: திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போன்று திருச்சியிலும் ஒரு கோவில் கட்டப்படும் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் குழு உறுப்பினர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இவர், இந்தக் கோரிக்கை தமிழக பக்தர்களால் நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இதுதொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். பின்னர் திருச்சியிலும் தேவஸ்தானத்தின் கோவிலைக் கட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்று மருத்துவர் சங்கர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பால் தமிழக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் திருமலை அறவாரியம் கோவில்கள் கட்டி பராமரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சியிலும் இதேபோன்ற கோவில் கட்டப்பபட உள்ளது.
மேலும், சென்னை அருகே உள்ள பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா திவ்ய ஷேத்ரம் என்ற கோயிலை கட்டவும் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று குறிப்பிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர், இக்கோவிலைக் கட்டுவதில் நிர்வாகம் மிகுந்த ஆர்வத்துடன் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்தார். பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.