சென்னை: தமிழக காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.
மாநிலம் தழுவிய அளவில் கடந்த 23ஆம் தேதி இரவு 'முற்றுகைச் செயல்பாடு' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சுமார் 52 மணிநேரம் நீடித்தது.
அப்போது 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் 3,325 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 294 பேர் அடங்குவர் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு 2,526 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது கைதானவர்களிடம் இருந்து ஏழு நாட்டுத் துப்பாக்கிகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொலைக் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் நீடிக்கும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை அவ்வப்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். எனினும் ஒரே சமயத்தில் இரவோடு இரவாக நடவடிக்கையை தொடங்கி, இரு தினங்களில் நூற்றுக்கணக்கான பழைய கைதிகளை கைது செய்வது அடிக்கடி நிகழாது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சமூக விரோதிகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கத் தகுந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

