நெல் கொள்முதலுக்காக விவசாயிகள் இனி காத்திருக்கத் தேவையில்லை
சென்னை: தமிழக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இனி இணையம் வழி விவசாயிகள் கொள்முதலுக்கான முன்பதிவை மேற்கொள்ள இயலும் என்றும் பின்னர் குறிப்பிட்ட தேதியில், கொள்முதல் நிலையத்துக்குச் சென்று நெல்லை விற்று பயன்பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இணையம் வழியான முன்பதிவு நடைமுறை எளிமையாக இருக்கும் என்று நுகர்பொருள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக அரசு ஏராளமான தவறுகளைச் செய்துள்ளது என்கிறார் அண்ணாமலை
சென்னை: ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் திமுக அரசு ஏராளமான தவறுகளைச் செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார். தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தாம் மட்டுமே அறிவாளி என்பதுபோல் செயல்படுவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, நிதி அமைச்சர் பாஜகவினர் குறித்து தவறான கருத்துகளைக் கூறி வருவதாக தெரிவித்தார். "அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தியாகராஜன் பதிவிட்டு வருகிறார். அவருக்கு முதல்வர் நல்ல அறிவுரைகளைக் கூற வேண்டும்," என்றார் அண்ணாமலை. முன்னதாக, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கு
நாகை: இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மூன்று பேர் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து அவர்களைத் தாக்கி உள்ளனர். மீனவர்களின் படகில் ஏறி கத்தி, இரும்புக்கம்பிகளால் தாக்கப்பட்டதில் மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாகை பகுதி மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புமணி மூன்று நாள் பிரசாரம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மூன்று நாள்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்முறை அக்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் முதல் தேதி தொடங்கி மூன்று தினங்களுக்கு செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அன்புமணி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அதிக வாக்குகளைக் கவரும் இலக்குடன் அன்புமணி பிரசாரம் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

