காஞ்சிபுரம்: செங்காடு கிராமத்தின் ஒரே தெருவில் வசிக்கும் எட்டு பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, உடனடியாக இக்கிராமத்துக்கு விரைந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் அங்குள்ள மக்கள் அனை வரையும் பரிசோதித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் 350 குடும்பங்களில் 1,800 பேர் வசித்து வருகின்றனர்.
இவர்களில், ஒரே தெருவைச் சேர்ந்த எட்டு பேருக்கு அடுத்தடுத்து சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக சிறுநீரகத் துறை தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் தலைமையில் 40 மருத்துவர்கள் உட்பட 62 பேர் கொண்ட குழுவினர் செங்காடு கிராமத்தில் வீடுவீடாகச் சென்று அவர்களது உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனைகளைச் செய்தனர். அத்துடன், அங்குள்ள நிலத்தடி நீரையும் ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், செங்காடு கிராமத்தின் பக்கத்தில் இயங்கி வரும் அலுமினியம் உருக்கும் ஆலையில் இரவு நேரத்தில் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் அதன் துகள்கள் தண்ணீரில் கலப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழக அரசு இப்பிரச்சினை குறித்து உடனடியாக ஆய்வு நடத்தி அந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.