சென்னை: தற்காலிகப் பணியில் நியமிக்கப்பட்ட 2,000 தாதியர் தங்களது பணியை நிரந்தரம் செய்யக் கோரி தொடர் உள்ளிருப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்கக வளாகத்தில் இந்தப் போராட்டம் தொடர்கிறது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாதியர் கூறுகையில், "திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவச் சேவையாற்றிய எங்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
"திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 1,212 ஒப்பந்த முறையில் பணி புரிந்த தாதியரை பணி நியமனம் செய்தது.
"மீதமுள்ள 3,485 தாதியர் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வந்தோம்.
"ஆனால், கடந்த இரு மாதங்களாக தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தாதியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உணவு, தங்கும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை.
"தற்காலிக பணி நியமனம் செய்யப்படும் தாதியருக்கு ரூ.14,000 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சம்பளமும் கடந்த கடந்த இரண்டு மூன்று மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை," என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.

