சென்னை: அரசுப் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததை அடுத்து அதில் இருந்த பயணிகள் உடனடியாக அதில் இருந்து இறங்கி, அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
எனினும் இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை கோயம்பேடு பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் இன்ஜின் பகுதியில் திடீரென புகை கிளம்பியது.
இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறினார்.
பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிக்கொண்டிருந்தபோதே இன்ஜின் பகுதியில் பெரிதாக தீ மூண்டது.
இதனால் பேருந்து ஓட்டுநரும் கீழே குதித்தார். இந்நிலையில் பேருந்தின் இதர பகுதிகளுக்கும் தீ பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்ந்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

