சென்னை: தமிழகத்தில் 'இறை சொத்து இறைவனுக்கே' என்னும் தாரக மந்திரத்தோடு கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருவதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 150 கிரவுண்ட் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மொத்த மதிப்பு 500 கோடி ரூபாய் என்றும் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
கோவிலுக்குச் சொந்தமான இடங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கோவிலுக்குச் சொந்தமான இடங்களை ஒருவர் பெற்று வேறொருவர் பயன்படுத்தி வருவதை கண்டறிந்து அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.
"மீட்கப்படும் நிலங்களின் வருமானத்தை கோவிலை நிர்வகிக்கவும் பணியாளர்களுக்கும் செலவிட இருக்கிறோம். கோவில் இடத்தில் வணிக வளாகம் கட்டி அதன்மூலம் வருமானம் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
"சட்டப்பேரவையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்கள் மீட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
"அதன்படி இன்றைக்கு துறை சார்ந்த செயலாளர், ஆணையாளர், இணை ஆணையாளர் உதவியோடு மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.1000 கோடியைத் தாண்டிவிட்டது," என்றார் அமைச்சர் சேகர்பாபு.

