தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆயுத தயாரிப்பைக் கண்காணிக்கவும் அனைத்து காவல்துறை ஆணையாளர்களுக்கும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
"முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து தமிழக அளவில் நடத்தப்பட்ட 'ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்' என்னும் தேடுதல் வேட்டையில் கிட்டத்தட்ட 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள், ஏழு கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
"கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களைக் கண்டறிய வேண்டும். பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்தக் காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்," என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை கடை, பட்டறைகளில் பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


