கோவை: கடந்த 45 ஆண்டுகளாக யோகா பயிற்சியை பல லட்சம் பேருக்கு கற்றுக்கொடுத்து, உடல்நலக் குறைவால் காலமான யோகா பாட்டி நாணம்மாள் என்பவரைப் பற்றிய தகவல் உடற்கல்வி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தேசிய அளவில் நாணம்மாளின் யோகா பயிற்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் மட்டுமின்றி கோவை மாவட்டத்திற்கான பெருமையாகவும் கோவை மக்கள் இச்செய்தியைக் கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நாணம்மாளின் யோகா பயிற்சி குறித்த தகவல் சிபிஎஸ்இ பிளஸ் 1 உடற்கல்வி பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், நாட்டில் உள்ள மாணவர்கள் நாணம்மாள் பாட்டி குறித்து அறிந்துகொள்ள முடியும்.
ஏறக்குறைய 45 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு இவர் யோகா கலையை கற்றுக்கொடுத்துள்ளார். அவர்களில் 600 பேர் தற்போது யோகா ஆசிரியர்களாகப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
நாணம்மாளுக்கு 2016ல் மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதும் 2018ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக 2019ல் தனது 99வது வயதில் காலமானார்.

