சென்னை: தலைநகர் சென்னை யைச் சிங்காரச் சென்னையாக உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தி, அழகுபடுத்தும் வகையில், முதல்கட்டமாக ரூ.500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளிவந்துள்ளன.
"சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
"பழமையான கட்டடங்கள், நகர்ப்புற நில மேம்பாடு, மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்த 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
"பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, நலம் மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, சென்னை மேம்பாடு காண உள்ளது.
"தூய்மை சென்னை திட்டத்தின் கீழ், குப்பைகள் இல்லாத, சுவரொட்டி இல்லாத சென்னையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
"பசுமை சென்னை திட்டத்தின் படி, நகர் முழுவதும் பொதுமக்கள் பங்களிப்புடன் மரங்கள் நடப்படும்.
"நீர்மிகு சென்னை திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் சீரமைக்கப்படும்.
"எழில்மிகு சென்னை திட்டத்தின் மூலம் ரிப்பன் கட்டடம், விக்டோரியா பொது மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும்.
"நலமிகு சென்னை திட்டத்தின் கீழ் நவீன, சமுதாய கழிவறைகள் அமைக்கப்படும். பாதுகாப்பான சென்னையின்கீழ் ஒவ்வொரு 25 மீட்டருக்கும் தெருவிளக்குகள், பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

