சென்னை: கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் முன்பு தமது கடைசி ஆட்டத்தை சென்னையில் ஆட வேண்டும் என்று விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி (படம்) தெரிவித்துள்ளார்.
தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமையேற்றுள்ள அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இப்போது டோனிக்கு நாற்பது வயதாகிறது. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கடைசியாக விளையாடினார்.
இந்நிலையில் அவர் நடப்பு ஐபிஎல் போட்டி முடிவடைந்த பின்னர் முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவார் என அண்மையில் தகவல் வெளியானது. எனினும் தாம் அடுத்த ஆண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை டோனியே உறுதி செய்துள்ளார்.
இணையம் வழி ரசிகர்களுடன் உரையாடிய அவர், அனைத்துலகப் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதை அறிவிக்க இந்திய சுதந்திர தினத்தைவிட சிறந்த ஒரு நாள் இருக்காது என எண்ணி தாம் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார்.
"எனினும் எனக்கான பிரிவு உபசார போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் அமைய வாய்ப்பு உள்ளது. அதைவிட சிறந்ததொரு பிரிவு உபசார விழா எனக்கு அமையாது," என்றார் டோனி.
ஏராளமான விளம்பரங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் என்பதால், ஓய்வுக்குப் பிறகு இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், நடிப்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றார்.
மேலும், ஓய்வுக்குப் பிறகும் கிரிக்கெட் விளையாட்டுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.