சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை முடக்க பல்வேறுகட்ட நடவடிக்கைகளை வருமான வரித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலாவுக்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்தனர். அது மட்டுமல்லாமல் இதுவரை சுமார் 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வரி பாக்கி நிலுவை காரணமாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை துறையினர் தெரிவித்துள்ளனர்.

