கடலூர்: டெங்கிக் கொசுவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த திட்டக்குடி பகுதியில் தூய்மைப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதுடன் சுத்தப்படுத்தும் களத்தில் தானும் ஒருவராகக் குதித்துள்ளார் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான சி.வெ.கணேசன்,
அவர், மக்களோடு மக்களாக தலையில் மண்சட்டியை சுமந்தும் மண்வெட்டியால் முட்புதர்களை வெட்டி அகற்றியும் பணிபுரிந்து வருகிறார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், திமுக தொண்டர்களைக் கொண்டு திட்டக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை சாலையில் உள்ள குப்பைகள், வாய்க்கால்கள், கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சி.வெ.கணேசன் அகற்றினார்.
அத்துடன், சாலையோர முட்புதர்களையும் மண்வெட்டியால் வெட்டி அவர் சுத்தம் செய்தார்.
இந்த தூய்மைப் பணிகள் நேற்று பெண்ணாடத்திலும் அதையடுத்து விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தாக்கம் படிப்படியாக கட்டுக்குள் ஒடுங்கி வரும் நிலையில், டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடலூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இப்பாதிப்பு அதிகமாக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகள் தொடர்கின்றன.