362 பேர் சிகிச்சையில் உள்ளனர்; பல்வேறு காய்ச்சல்களால் 11,000 பேர் அவதி
சென்னை: தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் மட்டும் 3,090 பேருக்கு டெங்கி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (படம்) தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்துள்ளதாகவும் தற்போது 362 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் டெங்கி பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர் மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தமிழகத்தில் டெங்கி உட்பட பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கடந்த ஆண்டைவிட இம்முறை டெங்கி காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது என்றும் இந்து தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க இருப்பதால், டெங்கியின் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் க.குழந்தைசாமி தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வெறும் அறிவிப்புடன் நிற்காமல், தற்போது நான்கு குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த அனைத்து மருத்துவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.