சென்னை: ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 90 விழுக்காடு இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.
கடந்த 6ஆம் தேதியும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. நேற்று முன்தினம் காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை திமுகவின் பெரும் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
விடிய விடிய நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே திமுக முன்னனிலை வகித்தது. தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களை கைப்பற்றியது. அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே மிஞ்சின.
இதேபோல், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் திமுக கூட்டணி 1,007 இடங்களில் வென்றுள்ளது. அதிமுகவுக்கு 214 இடங்களும் பாமகவுக்கு 45 இடங்களும் கிடைத்துள்ளன.
அமமுக ஐந்து இடங்களில் வென்றுள்ள நிலையில் தேமுதிகவுக்கு ஒரேயோர் இடத்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 96 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை சுயேட்சைகளும் இதர கட்சிகளின் வேட்பாளர்களும் வென்றுள்ளனர்.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரு பதவிகளையும் சேர்த்து 95% இடங்கள் திமுக வசமாகி உள்ளது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக அதிமுக புகார் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து விசாரிக்க வலியுறுத்தி அதிமுக சார்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் பல இடங்களில் காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை என்றும் அதிமுக சாடியுள்ளது.

