23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்துள்ளதாக புகார் கூறி உள்ளார். நாகை மீன்பிடி துறை முகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர் என்று தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கையில் உள்ள காரைநகர் பகுதியில் தனிமைப் படுத்தும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், தமிழக மீனவர்கள் 23 பேரும் கோடியக்கரை பகுதியில் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சிங்களப் படையினர், தமிழக மீனவர்களை கைது செய்து அவர்கள் இலங்கை எல்லையில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
நாகை மாவட்டத்தையொட்டிய பகுதியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பே வெகு சில கிலோ மீட்டர்கள்தான். அனைத்துலகக் கடல் எல்லையைக் கூட வரையறுக்க முடியாத அளவுக்கு அப்பகுதியில் கடற்பரப்பு குறுகியதாக உள்ளது. அதனால், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தவறு தலாக நுழைவதும் இயல்பு. அத்தகைய சூழல்களில் கைது இல்லாமல் மென்மையாக கையாள வேண்டும் என்று பன்னாட்டு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. மேலும் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
வங்கக்கடலில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லைகளைக் கடந்து சென்று மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுவிடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

