ஈரோடு: எனது மனைவியை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆணவக் கொலை செய்துவிடலாம் என்ற அச்சம் உள்ளதாக ஆடவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலிசாரின் அதிரடி முயற்சியால் பெண் மீட்கப்பட்டு அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சலங்கபாளையத்தைச் சேர்ந்த செல்வனும் பவானி குருப்ப நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இளமதியும் கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.
இளமதியின் கணவர் தலித் இனத்தவர் என்பதால், இந்தக் காதல் திருமணத்திற்கு இளமதியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருவரையும் தனித்தனி காரில் கடத்தி மிரட்டிய அவர்கள், இளமதியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர்.
பின்னர் கொளத்தூர் காவல்நிலையத்தில் நடந்த விசாரணையில் பெண்ணை பெற்றோருடன் போலிசார் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், ஓராண்டாகியும் மனைவியை மீட்கமுடியாத நிலையில், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து செல்வன் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். "எனது மனைவியைக் கடந்த ஓராண்டாக தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். எனது மனைவி இளமதியை அவரது உறவினர்கள் ஆணவக்கொலை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக இளமதி எனக்கு குரல் பதிவு மூலம் தகவல் அனுப்பி உள்ளார்," என்று கூறி ஆடியோ ஆதாரத்தை அளித்தார்.
அப்பதிவில், இளமதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை மீட்குமாறும் அழுதுகொண்டே பேசியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார் இளமதியை அவரது பெற்றோரிடம் இருந்து மீட்டனர்.

