சென்னை: சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு 'எம்ஜிஆர் மாளிகை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, 49 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்நாளை பொன்விழாவாகக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துவதற்கு அதிமுக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பொன்விழா இலச்சினையுடன் கூடிய, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்கள் அதிமுக முன்னோடிகளுக்கு அணிவிக்கப்படும்.
அதிமுக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து விநியோகிப்பதோடு, ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைக்கப்படும். இரட்டை இலைச் சின்னம் வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்படும்.
அதிமுக வளர்ச்சிக்காகத் தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இவ்வாண்டு முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி, கெளரவிக்கப்பட உள்ளது என்றும் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதற்கிைடயே, "தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. பண்டிகை, திருமண நாள்களை முன்னிட்டு இவற்றை பதுக்கி, அதிக விலைக்கு விற்க நினைப்போரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்," என முதல்வரை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

