நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்குச் சென்றிருந்த பக்தர்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிக்கொண்ட நிலையில் அவர்களைத் தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல்துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது.
இந்நிலையில், திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீண்டும் தங்கள் வீட்டுக்குத் திரும்பமுடியாமல் தவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் கயிற்றைக் கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் வட்டாரங்களில் கடந்த இரு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று மலைக்கோவிலுக்குச் சென்ற நூற்றுக்கு மேற்பட்டோர் நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அக்கரையில் சிக்கிக்கொண்டனர்.
இேதபோல், கோபி, செங்கோட்டையன் நகரில் பலத்த மழையால் 25 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. 8 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.