சேலம்: பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணான தேஜ் மண்டல் என்பவர் சேலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த நிலையில், திடீரென்று இப்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு 'சூட்கேஸ்' பெட்டிக்குள் திணித்து வைக்கப்பட்டிருந்த அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் உடலை ஐந்து நாட்களுக்கு முன் பெட்டியில் மறைத்து வைத்து இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளதாக போலிசார் கூறினர்.
அத்துடன், தேஜ் மண்டல் பல்வேறு இடங்களில் உடற்பிடிப்பு நிலையங்களை நடத்தி வந்ததுடன் சேலம் மாநகரில் அழகு நிலையம் என்ற பெயரில் ஃபேர்லேண்ட்ஸ், சங்கர்நகர் உள்ளிட்ட மூன்று இடங்களில் அழகு நிலையங்களையும் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சேலம், குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ் மண்டல், 27, தனது கணவர் பிரதாப்புடன் கடந்த ஓராண்டாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரதாப், சேலத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர் நடேசனை கைபேசியில் அழைத்து, கடந்த சில நாட்களாக தான் சென்னையில் இருப்பதாகவும் தேஜ் மண்டல் தொலைபேசியை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, நடேசன் தேஜ் மண்டல் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
போலிசார் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது பரண் மீது இருந்த ஒரு 'சூட்கேஸ்' பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் தேஜ் மண்டலின் சடலம் இருந்ததை நடேசன் உறுதிப்படுத்தினார். போலிசாரின் விசாரணை தொடர்கிறது.