தென்காசி: முதல்நாளிலேயே ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்களை ஈர்த்து நினைத்து, கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்ட துணிக்கடை உரிமையாளர், கடைசியில் தண்டம் கட்ட நேர்ந்ததுதான் மிச்சம்!
ஆலங்குளத்தைச் சேர்ந்த அந்தக் கடைக்காரர், முதலில் வரும் 3,000 பெண்களுக்கு 50 ரூபாக்குச் சேலை விற்கப்படும் என அறிவித்தார்.
கடை திறப்பதற்கு முதல்நாள், திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் அந்தச் சலுகை குறித்து பிரம்மாண்டமான பதாகை ஒன்றும் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆலங்குளத்தையும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களையும் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நேற்றுக் காலையிலேயே அக்கடைமுன் திரண்டனர்.
“ஒருவரும் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வரவேண்டியதாயிற்று,” என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, சுகாதாரத் துறையினர், துணிக்கடை உரிமையாளர்க்கு ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர், தென்காசி தொகுதி எம்எல்ஏ, தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கடையைத் திறந்து வைத்தனர் என்பதுதான் வியப்பளிக்கும் தகவல்!