பொதுச்செயலாளர் சசி: அதிமுக கடும் அதிர்ச்சி

பொதுச்செயலாளர் சசி: அதிமுக கடும் அதிர்ச்சி

2 mins read
6d36eb3e-b757-4007-bf89-55c79b889079
-

சென்னை: எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டுள்ளது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாட அக்கட்சியின் இரட்டைத் தலைமை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு சென்றிருந்தார் சசிகலா. அங்கு அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர், பின்னர் புது கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்தக் கல்வெட்டுதான் புதிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது

அந்தக் கல்வெட்டில், 'அதிமுக கொடியை ஏற்றியவர் வி.கே.சசிகலா, கழக பொதுச் செயலாளர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.தாம் இன்னும் அதிமுகவின் பொதுச்செயலாளராக நீடிப்பதாக சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் நடப்பு அதிமுக தலைமையோ பொதுச்செயலாளர் என்ற பதவியே கட்சிக்குத் தேவை இல்லை என்று கூறி வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் தமது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா, எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் திறந்து வைத்த கல்வெட்டு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார், பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பார் என சசிகலா குறித்து அவ்வப்போது ஏதாவது பரபரப்புச் செய்தி வெளியான வண்ணம் உள்ளன. அதிமுகவில் உள்ள சில பிரமுகர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக வெளியே செல்லும்போது தனது காரில் அதிமுக கொடியைப் பறக்க விடுகிறார் சசிகலா. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், 'பொதுச்செயலாளர் சசிகலா' என்று குறிப்பிடும் கல்வெட்டு விவகாரம் கிளம்பியுள்ளது. இதை அதிமுக தலைமை சட்ட ரீதியில் அணுக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.