சென்னை: காவல் நிலையங்களில் பணியில் உள்ள எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை, நூறு ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறுவது தெரிய வந்துள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
இனி லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதச் செயல்களை அனுமதிக்கும் போலிசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் தலைமையகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்், காவலர்கள் எவ்வளவு தொகையை லஞ்சமாக பெறுகிறார்கள் என்ற விவரம் உத்தேசமாக குறிப்பிடப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, சொத்து தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுகிறது. சட்ட விரோத மது விற்பனைக்கு 60 ஆயிரம் ரூபாயும் மணல் கடத்தலுக்கு 30 ஆயிரம் ரூபாயும் சூதாட்டம், விபத்து தொடர்பான வழக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது," என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
டிஜிபியின் இந்த எச்சரிக்கையை அடுத்து காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.