லக்னோ: மேடையில் ராமாயண நாடகம் அரங்கேறியபோது, ராமனின் தந்தை தசரதன் வேடமிட்டு நடித்தவர் மாரடைப்பால் மேடையிலேயே மாண்டுபோனார்.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டம், ஹசன்பூர் எனும் சிற்றூரில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது.
ராஜேந்திர சிங் என்ற அந்த 62 வயது நடிகர், காட்டுக்குச் சென்ற ராமனைத் திரும்ப அழைத்து வரும்படி அமைச்சரிடம் கூறும் காட்சி இடம்பெற்றபோது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
அவரது நடிப்பைக் கண்டு மெய்மறந்துபோன ரசிகர்கள், தொடர்ந்து கை தட்டியவாறே இருந்தனர். ஆனால், மாரடைப்பால் அவர் மயங்கி விழுந்ததை அறிந்ததும் அவர்கள் கை தட்டுவதை நிறுத்தினர்.
மயங்கி விழுந்த ராஜேந்திர சிங்கை சக நடிகர்கள் எழுப்ப முயன்றனர். ஆனால், அதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக அவர் தசரதன் வேடம் பூண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் மகிழ்ச்சியாக இருந்த ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.