மதுரை: மதுரையில் அமைய உள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு 90 விழுக்காடு செய்து முடித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இம்மருத்துவமனைக்கான கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை வாடகைக் கட்டடத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனையை நடத்துவதற்கு தயார் என்றும் அதற்கான வாடகையையும் தருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் கூடிய ஒரு தொற்று நோய்ப் பிரிவு சேர்க்கப்படும் என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஜப்பானிய நிறுவனமொன்று 1,977.8 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது என்றார்.
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புறநோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவாக மட்டுமே செயல்படாமல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வசதியைக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு தற்காலிக கட்டடம் ஒன்றைத் தேர்வு செய்வது குறித்தும், அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது பற்றியும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
"மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டுள்ள குழு 20ஆம் தேதி மதுரையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளது," என்றார் ராதாகிருஷ்ணன்.

