கொடைக்கானல்: தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையால் மக்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மருத்துவ மனையில் ஆய்வு செய்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"தமிழகத்தில் நேற்று முன்தினம் மாலை வரை மொத்தம் 5 கோடியே 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
"ஏறக்குறைய 67% மக்கள் முதல் தவணை தடுப்பூசியும் 27% மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இல்லை. இதுவரை ஐந்து சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் மூன்றாம் அலை பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது," என்று சொன்னவர், "தமிழகத்தில் டெங்கிக் காய்ச்சலின் தாக்கமும் அதிகம் இல்லை. தற்போது வரை 381 பேர் சிகிச்சையில் உள்ளனர்," என்று குறிப்பிட்டார்.