மதுரை: அண்மையில் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றிபெற்றனர்.
இந்தத் தேர்தல் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில், 2031ஆம் ஆண்டில் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்பு உறுதிமொழி எடுப்பதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
“ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்,” என்ற வரிகள் அச்சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.
‘2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு, நீங்கள்தான் தமிழகத்தின் இறுதித் தீர்வு’ எனக் குறிப்பிட்டு, விஜய்மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவரின் ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மைய உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்ற, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தன.
ஆனால், முதன்முறையாகத் தேர்தல் களத்தில் குதித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் வென்றிருப்பது தமிழக அரசியலில் கவனிக்கப்படுவதாக அமைந்துள்ளது.