பெரம்பலூர்: திரைப்படங்களில் வரும் வசனங்களைப் போல், மற்றொரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி 'திரிஷா இல்லைன்னா திவ்யா' என்று குறுஞ்செய்தி அனுப்பி வெறுப்பேற்றி வரும் தனது கணவர் மீது ஆட்சியரிடம் கௌசல்யா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், பாபங்கரை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா, 20, நாமக்கல் மாவட்டம், தெப்பக்குள காடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 35, என்பவரைக் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், ரஞ்சித்குமாருக்கு உலிபுரத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்து கௌசல்யாவின் உறவினர்கள் ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது நான் அப்படித்தான் இருப்பேன் என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், கௌசல்யாவின் கைபேசி எண்ணுக்கு திரிஷா இல்லை என்றால் திவ்யா என்ற பாணியில் உலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா என்ற பெண்ணுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை அனுப்பி வெறுப்பேற்றி உள்ளார் ரஞ்சித்குமார்.
இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலை யம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என புகார் கொடுப்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட கௌசல்யா, இப்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது ஒரு மாத கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தன்னை ஏமாற்றிய ரஞ்சித்குமார் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

