சென்னை: வருமான வரித் துறை யினர் எனது இல்லத்தில் எந்த ஆவணங்களையும் கைப்பற்ற வில்லை என்று அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"அதிமுகவிற்கு சோதனை என்பது புதிதல்ல. இந்த வருமானவரி சோதனையை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேச உள்ளனர்.
ஆளுநரிடம் அதிமுகவினர் மீது அடுத்தடுத்து எடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்து பழனிசாமி புகார் தெரிவிக்க உள்ள தாகவும் கூறப்படுகிறது.
விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 50 இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 19 மணி நேரமாக சோதனை நீடித்தது.
லஞ்ச ஒழிப்புப் போலிசாரின் இந்தச் சோதனையில் 4.87 கிலோ தங்கம், ரூ.23.82 லட்சம் ரொக்கப் பணம், சொத்து பரிவர்த்தனை தொடர்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், "பொதுவாழ்க்கையில் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகிறேன்.
"மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எனக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றுள்ளது. இந்த பிரச்கினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்," என்று கூறி யுள்ளதாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த சோதனை குறித்து அதிமுக இரட்டைத் தலைமை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
"லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது.
"திமுகவின் முயற்சிகளால் அதிமுக இயக்கம் முடங்கப் போவதோ, சாயப் போவதோ இல்லை," என குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள நிலையில், தனது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
நான் சட்டத்தைப் பின்பற்றி நடக்கும் குடிமகன். என் வீட்டில் இருந்து தங்கம், பணம் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. கணக்கில் வராத பணம், நகை எதுவும் என்னிடம் இல்லை. என் வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

