சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு புதிய நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக் ஆகிய நால்வரையும் நியமித்து கடந்த வாரம் அதிபர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், நீதிபதிகள் நால்வரும் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியேற்ற பிறகு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் பேசினர்.
நீதிபதி ஸ்ரீமதி சுந்தரம் பேசும்போது, "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்ற திருக்குறளின்படி நடுநிலையோடு நீதிபதியாகப் பணியாற்றுவேன்" என்று சொன்னார்.
நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி கூறுகையில், "28 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி தற்போது நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது," என்றார்.
நீதிபதி ஆர்.விஜயகுமார் பேசும்போது, "என்னை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், வி.ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார். அதேபோல, நீதிபதி முகமது சபிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
நாட்டிலேயே சென்னை நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். தற்போது, ஸ்ரீமதி சுந்தரம் நீதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

