திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்குத் தலைமைக் கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், "நான் அரசியலில் கால் பதித்துள்ளது எனக்கே பிடிக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
"என் தாய்-தகப்பன், மனைவி, பிள்ளைகள் அனைவருக்குமே நான் அரசியலில் ஈடுபடுவதில் விருப்பமில்லை. தொண்டர்கள், நிர்வாகிகளின் நிர்பந்தத்தால்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்," என்று அவர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்தார்.
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை முழுமையாக மறுப்பதாகக் கூறிய அவர், "வாரிசு அரசியல் எனில் எம்எல்ஏ தேர்தலிலேயே நான் நின்றிருப்பேன். ஆனால், அப்படி நான் நிற்கவில்லை. தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக ஒருவரை வலுக்கட்டாயமாக கட்சிக்குள் திணிக்க முற்படுவதுதான் வாரிசு அரசியலாக நான் கருதுகிறேன்," என்றார் அவர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சியினரிடம் நடத்திய ரகசிய வாக்கெடுப்பில் 106 பேரில் 104 பேர் நான் வரவேண்டும் என்றும் இருவர் வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். எனக்கு வாக்களிக்காத இருவரும் 'தம்பிக்கு வாக்களிக்கவில்லையே' என்று வருத்தப்படும் அளவுக்கு எனது செயல்பாடுகள் இருக்கும்.
"ஒரு மலையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டது போல சுமையாகவும் சவால் நிறைந்த பயணமாகவும் இப்பொறுப்பை உணர்கிறேன். எனது அப்பாவைப் போல் எனக்கு செயலாற்றல், சொல்லாற்றல் கிடையாது. எனினும், கட்சியில் உள்ள தொய்வைச் சரிசெய்வது தனது முதல் இலக்கு," என்று அவர் கூறினார்.