கோவை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமிப்பரவலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கட்டுக்குள் வந்து கொண்டுள்ள நிலையில், டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு மக்களிடம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும், குறிப்பாக மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் கோவை மாவட்டத்திலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் ஒரே மாதத்தில் 23 பேர் இந்தக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கிக் காய்ச்சல் ஏற்படுவதால், இக்கொசுக்களைக் கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறை, பள்ளிக்கல்வித் துறையுடன் சுகாதாரத்துறை இணைந்து பணியாற்றி வருகிறது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், "கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இக்காய்ச்சலைத் தடுக்கும் பணிகளை கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது," என்றார்.
கோவை நகர, புறநகர்ப் பகுதிகளில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் இத னைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா கூறினார்.
"ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் பகுதிகளைக் கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை சார்பில் 12 வட்டாரங்களில் சிறப்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
"இந்த சமயத்தில் கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வீடுகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.25,000 வரையும் அபராதம் விதிக்கப்படும்.
"பொதுமக்கள் தங்கள் வீடுகள், சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கொசு உற்பத்தியாகாமல் சுத்தமாக, குப்பை கள் சேராமல் வைத்துக்கொள்ள வேண்டும்," என்று அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.

