திருச்சி: ஏற்கெனவே அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதிமுதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
"பள்ளிகள் திறப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயம் அல்ல. தீபாவளி முடிந்தபிறகு கூட வரலாம்,'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களி டம் அவர் பேசியபோது, "நவம்பர் 1ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டிய கட்டாயம் இல்லை. முடிந்தவர்கள் வரலாம். தீபாவளி முடிந்தபின்னர் கூட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். வராவிடிலும் பரவாயில்லை.
"இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு இதுவரை 50,000 மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில், 1.5 லட்சம் பேர் பதிவு செய்வர் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.