சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (படம்) மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பில் 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் மணிகண்டனுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் தொடர்பில் மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மணிகண்டனுக்கு எதிராக 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ள போலிசார், ஏற்ெகனவே பதிவான ஆறு பிரிவுகளுடன் 'சட்டவிரோதமாக சிறைபிடித்தல்', 'தாக்கி காயம் விளைவித்தல்' ஆகிய இரு பிரிவுகளையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணிகண்டன் மீது சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் சாந்தினி காவல்துறையில் அளித்திருந்த புகார் மனுவில், "மணிகண்டனும் நானும் ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்தோம். என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, மூன்று முறை தாம் கருக்கலைப்பு செய்ததாகவும் தனது உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

