தஞ்சாவூர்: அதிமுகவின் கொடி கட்டப்பட்ட காரில் தனது அரசியல் பயணத்தை நேற்று தொடங்கினார் சசிகலா.
மதுரை, தஞ்சை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் தனது சூறாவளி சுற்றுப்பயணம் தொடரும் என்றும் அப்போது தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாகவும் மாலைமலர் ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் சிறைக்கு சென்று விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், அதன்பிறகு அதிமுக தொண்டர்களோடு கைபேசியில் பேசும் ஒலிப்பதிவுகள் வெளியாகி பரபரப்பூட்டின.
அண்ைமயில், 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்துவைத்தது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரு வாரகால அரசியல் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார். இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார்.
நாளை 28ஆம் தேதி மதுரையில் முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, ஆதரவாளர்களுடன் பேச உள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், "சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் சேர்ந்து முடிவெடுப்பார்கள்," என்றார். இந்தக் கருத்துக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி ஆகியோர் சசிகலாவிற்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

