பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற பணம், பதவி என பேரம்
சென்னை: அதிமுக தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதில் அக்கட்சியின் ஒருக்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வெடித்திருப்பதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த மோதல் மிக விரைவில் பகிரங்கமாக வெடிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
வரும் டிசம்பரில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அச்சமயம் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தப் பதவியைக் கைப்பற்றுவதில் ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இருவரும் முனைப்பாக உள்ளனர்.
இதையடுத்து, கட்சிக்கும் தங்களுக்குள்ள ஆதரவாளர்களை அடையாளம் கண்டு, அணிதிரட்டி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ஜெசிடி பிரபாகரனை கட்சியின் அவைத்தலைவராக நியமிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி உள்ளது.
ஆனால், எடப்பாடி தரப்போ, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ இந்த பதவிக்கு முன்னிறுத்துகிறது.
காலஞ்சென்ற அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் போலவே ஜெயக்குமாரும் வட சென்னையில் செல்வாக்கு மிக்கவர்.
தற்போது உள்ள ஏற்பாட்டின்படி, கட்சிக்கு இரட்டைத் தலைமை நீடிக்கட்டும் என எடப்பாடி தரப்பு முடிவெடுத்தால், அதற்கு உடன்பட ஓபிஎஸ் முன்வருவார் என்றும் ஒற்றைத்தலைமை என்றால் அவரும் களத்தில் மோதுவார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுவதாக 'தினகரன்' ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இருதரப்பினரும் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். பணம், பதவி என்று பேரம் பேசப்படுகிறது என்றும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து ஓபிஎஸ் பேசி வருவது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அதிமுகவில் இன்றளவும் நீடிக்கும் சசிகலாவின் அனுதாபிகளுடைய ஆதரவையும் பெறுவதற்காகவே ஓபிஎஸ் காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.
அடுத்த சில வாரங்களுக்குள் ஒற்றைத்தலைமையா இரட்டைத்தலைமையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு ஓபிஎஸ் கெடு விடுத்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவைப் பொறுத்தே அதிமுகவில் மோதல் வெடிக்குமா, கட்சி மீண்டும் இரண்டாகப் பிளவுபடுமா என்பது தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

