மதுரை: வேளாண்மைத் துறையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி, முழுமையான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரருக்கு அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வேளாண்மைத்துறையில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அப்துல்லா என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அண்மையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2013இல் இருந்து வேளாண்மைத்துறை முன்னாள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் சொட்டுநீர் பாசன கருவிகள் வாங்கியது, இயந்திர கொள்முதல், விதை கொள்முதல், கணினி பொருள்கள் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஊழல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் இந்த மோசடி, முறைகேடு தொடர்பாக விசாரித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அப்துல்லா தமது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், போதுமான ஆவணங்கள் இல்லாமல் குற்றம்சாட்ட முடியாது என்றனர்.
"தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்யும்போது முழுமையான ஆவணங்களையும் மனுதாரர் சேர்க்க வேண்டும்," என்று குறிப்பிட்டு நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.
இதையடுத்து, உரிய ஆவணங்களுடன் மீண்டும் வழக்கு தொடுக்க இருப்பதாக அப்துல்லா தரப்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.