நீலகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த சம்பவத்தில் தடயங்களை அழித்த குற்றச்சாட்டின் தொடர்பில் கைதாகியுள்ள ரமேஷை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இந்த வழக்கில் கனகராஜின் அண்ணன் தனபாலை ஐந்து நாள் கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் அனுமதியளித்த நீதிமன்றம், இதேபோல் ரமேஷையும் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
கனகராஜ் உயிரிழந்த சம்பவத்தில் பதிவான தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலையும் அவரது உறவினர் ரமேஷையும் போலிசார் கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர்.
நீலகிரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, குற்றவாளிகள் இருவரையும் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, கூடலூர் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு பங்களாவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது இரவு நேர காவலாளியாக இருந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அத்துடன் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.
கனகராஜின் கைபேசியில் பதிவான ஆதாரங்களை அழித்துள்ளதாகவும் இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளைத் தனிப்பட்ட முறையில் அணுகி விசாரணையில் குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே சொல்லவேண்டும் என தனபாலும் ரமேஷும் வலியுறுத்தியதும் தெரியவந்தது.
இதற்கிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

