பவானி: பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அரசு மருத்துவர் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், உடையனூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன், 53. இவரது மனைவி இந்திராணி, 51. இவர் மேட்டூரை அடுத்த வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
தம்பதியர் இருவரும் மேட்டூர், சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த சத்தியசீலன், 24, என்னும் இளைஞரை அழைத்துக் கொண்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று விட்டு மேட்டூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நேற்றுமுன்தினம் நள்ளிரவு நேரத்தில் கோவையில் இருந்து காரை தேவநாதன் ஓட்டி வந்துள்ளார்.
பவானி மேட்டூர் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, காரின் மீது படுவேகமாக மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். பொதுமக்கள் அழைப்பை அடுத்து விபத்து நடந்த இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினரும் பவானி போலிசாரும் ஒரு மணி நேரமாகப் போராடி உடல்களை மீட்டனர்.

