விழுப்புரம்: கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாள்களாகவே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயின் ஆசையை மகன் பூர்த்தி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், திருக்காமு நகரைச் சேர்ந்த தயாளன், அரசுப் பள்ளியில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 40 வயதாகியும் ஒரு பெண்ணும் பொருத்தப்பட்டு வராத தால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.
இந்நிலையில், இவரது தாய் முத்தாலம்மாள், 67, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில், உடல்நலன் இன்னும் தேறாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்தாலம்மாள் தனது மகன் தயாளனுக்குத் திருமணம் செய்து பார்க்கமுடியவில்லையே என கண் கலங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த தயாளன், தனது தாயைப் பார்ப்பதற்காக மருத்துவ மனைக்கு வந்திருந்த மாமன் மகள் காயத்ரியை, 30, உடனடியாகத் திருமணம் செய்துகொண்டார்.
மருத்துவமனை வளாகம் அருகிலுள்ள அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பிற்பகல் 3:45 மணிக்கு காயத்ரி-தயாளன் திருமணம் நடந்தது. அதன்பிறகு தாயிடம் ஆசி வாங்க மருத்துவமனைக்கு மணமக்கள் சென்றபோது, வார்டினுள் செல்ல மருத்துவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து, தாங்கள் திருமணம் செய்த தகவ லைத் தாயிடம் சொல்லும்படி கூறிவிட்டு வீடுதிரும்பினர்.

