தென்பெண்ணை ஆற்றில் உறை கிணறு
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், ஆற்றுத் தண்ணீருக்குள் பழங்கால உறை கிணறு இருந்ததைக் கண்டுபிடித்தனர். அத்துடன், அந்தக் கிணற்றில் இருந்த மண் ஓடுகளை எடுத்துப் பார்த்தபோது, அதில் கற்கால எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட இளையர்கள்
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் காவல்துறை வாகனத்தின் மீதும் வருவாய்த்துறை வாகனத்தின் மீதும் ஏறி நின்று இளைஞர்கள் சிலர் குத்தாட்டம் போட்டு ரகளை செய்த காட்சிகள் காணொளியாக வெளியாகி உள்ளன. சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காகவும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் போலிசார் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
27 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 593 ஆக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டு வரும் நிலையில், பாதிப்பு படுவேகத்தில் குறைந்து வருகிறது. ஆனால், முழுமையாக குறையவில்லை. இதனிடையே, வெள்ளிக்கிழமை மேலும் 1,039 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அத்துடன், 11 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,083ஆக அதிகரித்துள்ளது.
துபாய் கண்காட்சி: தமிழகம் பங்கேற்பு
சென்னை: துபாயில் இந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்துலக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் சுற்றுலா, கலாசாரம், கைத்தறி, காதி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயம், தமிழ் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் அடுத்த ஆண்டு மார்ச் 18 முதல் 24ஆம் தேதிவரை ஒரு வார காலத்துக்கு பங்கேற்க உள்ளன. கண்காட்சிக்குத் தயாராவதற்கான ரூ.5 கோடி செலவு நிதியை தொழில்துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி விழாவை ஒட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கும் மாலை போட்டனர்.