ஈரோடு: வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, ஈரோட்டில் செயல்பட்டு வரும் எஸ்கேஎம் நிறுவனத்திலும் அதற்குச் சொந்தமான 11 இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள, கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் சோளாங்கபாளையம், ஊத்துக்குளி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி முதல் இந்த இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கணக்கில் காட்டப்படாத தொகை, சொத்துகள் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்த சொத்துகள் எந்த வகையில் வாங்கப்பட்டன என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை முடிவடைந்த நிலையில், அடுத்து வரும் நாள்களில் கைது நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் மேலதிகத் தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
அண்மைய சில மாதங்களாக வரி ஏய்ப்பு செய்வதாகக் கருதப்படும் நிறுவனங்களைக் குறிவைத்து வருமான வரித்துறை அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

