சென்னை: தீபாவளி தினத்தன்று விதிமுறையை மீறி அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தூசுமூட்டம் அதிகரித் துக் காணப்பட்டது.
பகலில் பெய்த மழை இரவில் மட்டுப்பட்டதை அடுத்து, தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் பலரும் நேரக் கட்டுப்பாட்டை மீறி, சரவெடிகளைத் தொடர்ந்து தெறிக்கவிட்டனர்.
இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் போர்வை போல் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது.
முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றபோதிலும் கிண்டி, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகைமண்டலம் சூழ்ந்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
இதனால், அவசர சிகிச்சை வாகனமோட்டிகள் முதல் பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
தலைநகர் சென்னையில் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 100 முதல் 150 என்ற அளவில் 'மோசம்' என்கிற நிலைக்குச் சென்ற தாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, வடசென்னையில் மணலி உள்ளிட்ட பகுதிகளில் 344 என்ற அளவிலும் நுங்கம்பாக்கத்தில் 270க்கு மேலாகவும் காற்றுத் தூய் மைக்கேட்டின் பாதிப்பு அதிகமாகப் பதிவாகி இருந்தது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 983 வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த ஆண்டில் மாநிலத்தில் அனுமதிக்கப் பட்ட நேரத்தைவிடவும் கூடுதலான நேரத்துக்கு பட்டாசு வெடித்ததாக 2,282 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். இவர்களில் சென்னையில் மட்டும் 758 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
தீபாவளியன்று சென்னையில் குவியும் பட்டாசுக் குப்பைகளை 24 மணி நேரத்தில் அகற்றவேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டிருந்ததை அடுத்து, சென்னையில் நேற்று காலைவரை 48 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 431 கோடிக்கு மது விற்பனையான நிலையில், கடந்த ஆண்டைவிடவும் இவ்வாண்டில் ரூ.14 கோடி மது விற்பனை குறைவு என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

