புதுடெல்லி: கொவிட்-19க்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியதையடுத்து, பல்வேறு நாடுகளிலும் அதற்கு அங்கீகாரம் பெற இந்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. லண்டன் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஸெனிகா இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கின. கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்தது.
கோவிஷீல்டு தடுப்பூசிக்குப் பல நாடுகள் அனுமதியளித்தன. உலக சுகாதார அமைப்பும் அனுமதி அளித்தது. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு மட்டும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் தாமதித்தது.
கடைசியாக கடந்த 3ஆம் தேதி அவசரகாலப் பயன்பாட்டுக்கு கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்தது.
இதையடுத்து பல்வேறு நாடுகளிலும் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி பெறுவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு பல நாடுகளில் செயல்படும் தன் தூதரகங்கள் வாயிலாக பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்பட்சத்தில் இந்தியத் தடுப்பூசி பல நாடுகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும்.