மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு; மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு
சென்னை: கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் வெள்ளக்காடாகி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக அவர் நேரடி ஆய்வு மேற்கொண்டதை அடுத்து, மீட்பு, நிவாரணப் பணிகள் வேகமெடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் நிவாரணப் பணிகளை அவர் பார்வையிட்டார். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களுக்கும் சென்ற அவர், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
சில இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிய அவர், தமது கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.
மேலும், சென்னையில் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளுக்கும் நேரில் சென்ற அவர், நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மேலும் வேகம் தேவை என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்துவிட்டதால் பல்வேறு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு அருகே உள்ள நீர்நிலைகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கடந்த அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
அதிக அளவில் லஞ்சம் பெறப்பட்டதால் 'விவேக நகரம்' எனும் திட்டத்தின் கீழ் எந்தவித பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றார் அவர்.
"மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றும் விவேக நகரத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் முதல்வர் ஸ்டாலின். இதற்கிடையே, சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும், அதிமுக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் வழங்கினார்.