ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என ஒருதரப்பினர் குரல் கொடுக்கும் நிலையில், மற்றொரு தரப்பு அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தூத்துக்குடியில் ஏழு பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவர்கள் குறித்து ஆலைக்கு எதிரானவர்கள் அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் போராட்டம்: பாஜக எச்சரிக்கை
தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தவில்லை எனில், தமிழக விவசாயிகளைத் திரட்டி பேரணியாகச் சென்று அணைப் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து திமுக வாய் திறப்பதே இல்லை என்றார். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாஜகவுடன் இணைந்து போராட வர வேண்டும் என்றார் அண்ணாமலை.
குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கியது தொடர்பில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், அடுத்த பத்து வாரங்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரையரங்க இருக்கை பயன்பாடு: தடைகோரிய மனு தள்ளுபடி
சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதிக்கக் கூடாது என ஒருதரப்பினர் புகார் எழுப்பியுள்ளனர். இக் கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது. உடன்குடியைச் சேர்ந்த சிவமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திரை யரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதிப்பதால் தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அரசுத்தரப்பில் உரிய நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.